மாநில அளவிலான இறகு பந்தாட்டத்தில்

மாநில அளவிலான இறகு பந்தாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட வீரர்கள் சாதனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில அளவிலான சீனியர் பிரிவினர்களுக்கான இறகு பந்து போட்டி, கடந்த 8 தேதி தொடங்கி 12ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட இறகு பந்தாட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

இந்த போட்டியில், ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என்ற முறையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

இப்போட்டியில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, இறகுப்பந்தாட்ட கழக பயிற்றுநர் பாபு உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர். இதில், திருக்கோவிலூரை சேர்ந்த கோவிந்தராஜ் 65 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு போட்டியில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு தகுதி பெற்று சாதித்தார். 35 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் கள்ளக்குறிச்சி மகேந்திரன் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.